இந்திய உணவு வகைகளில் தென்னிந்திய உணவுகள் மிகவும் பிரபலமானவை. அதிலும், தமிழக பாரம்பரிய உணவு வகைகள் என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாத சுவையை கொண்டது. அப்படி, பாரம்பரிய உணவு வகைகளில் சிக்கன் ரெசிபி ஒன்றை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். கொங்கு நாடு ஸ்டைலில் செய்யப்படும் இந்த சிக்கன் சிந்தாமணி மிகவும் சுலபமான ரெசிபி. மிகவும் பழமையான வறுத்த ட்ரை சிக்கன் ரெசிபி. காரசாரமான சைட் டிஷ்ஷான இந்த ரெசிபி சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாற மிகவும் ஏற்றது. இப்போது இந்த கட்டுரையில் சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள போகிறோம்…
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 500 கிராம்
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- காய்ந்த மிளகாய் - 12 (விதைகள் நீக்கப்பட்டது)
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
- முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
- அத்துடன், வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கிளறவும்.
- அடுத்ததாக, சிக்கனை சேர்த்து அதன் நீர் விட்டு வரும் வரை சிறிது நேரம் மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.
- சிக்கனில் இருந்து வெளியேறிய நீர் வற்றியதும், அதில் கால் கப் நீர் ஊற்றி மூடி வைத்து குறைந்த தீயில் 30 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.
- கடைசியாக கறிவேப்பிலையை ஒரு கையளவு எடுத்து தாராளமாக தூவி இறக்கினால் சிக்கன் சிந்தாமணி தயார்…